சத்திரம் பேருந்து நிலையத்தில் மாற்றுத் திட்டம் தேவை.
திருச்சி, ஜூலை 9: திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மாற்றுத் திட்டம் கொண்டு வரப்படுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் மாநகர மக்கள்.
திருச்சியில் தற்போதுள்ள 2 பேருந்து நிலையங்களில் முக்கியமாகக் கருதப்படுவது சத்திரம் பேருந்து நிலையம்தான். நாள்தோறும் ஏறத்தாழ 300 முதல் 350 நகர்ப் பேருந்துகளும், நூற்றுக்கும் மேற்பட்ட புறநகர்ப் பேருந்துகளும் இங்கு வந்து செல்கின்றன.
திருச்சி மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களுக்கு இங்கிருந்துதான் பேருந்துகள் புறப்பட்டுச் செல்கின்றன. இங்கு வந்து செல்லும் மக்களின் எண்ணிக்கை பல ஆயிரத்தைத் தாண்டும். ஆனால், இந்தப் பேருந்து நிலையத்தில் போதுமான அடிப்படை வசதிகள் இருக்கிறதா என்று பார்த்தால் இல்லை என்ற பதில்தான் கிடைக்கும்.
மெயின்கார்டுகேட் அருகேயுள்ள மேலரண் சாலையில்தான் 35 ஆண்டுகளுக்கு முன்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதற்கு முன்பு பட்டர்வொர்த் சாலையில் பேருந்துகள் நிறுத்தி இயக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில், கடந்த 1975 ஆம் ஆண்டு அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த சீனிவாசன், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகளை இயக்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அன்றைக்குத் தொடங்கி இன்று வரை இந்த இடத்திலிருந்துதான் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
சத்திரம் பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில் லால்குடி, சமயபுரம், மண்ணச்சநல்லூர், பேட்டைவாய்த்தலை, ஜீயபுரம், குணசீலம் போன்ற வழித்தடங்களில் செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
மற்றொரு பகுதியில் உறையூர், தில்லைநகர், திருவெறும்பூர், துப்பாக்கித் தொழில்சாலை, பெல், துவாக்குடி, மாத்தூர் போன்ற வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன. ஸ்ரீரங்கத்திலிருந்து மத்திய பேருந்து நிலையத்துக்குச் செல்லும் பேருந்துகள் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு இயக்கப்படுகின்றன.
துறையூர், கரூர், கோவை, பெரம்பலூர், கடலூர் போன்ற ஊர்களுக்குச் செல்லும்- புறநகர்ப் பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகள் வந்து செல்ல சாலையோரத்தில் ஆங்காங்கே சில இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. நிற்க இடமுமில்லை; ஒதுங்கவும் இடமில்லை. இதுதான் இன்றைய சத்திரம் பேருந்து நிலையத்தின் நிலை.
போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி:
மிகக் குறுகிய இடத்தில் பேருந்து நிலையம் இயங்குவதால், குறிப்பிட்ட சில நேரங்களில் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் நடந்து செல்வதற்குக் கூட வழி இல்லாத அளவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கும்.
சத்திரம் பேருந்து நிலையத்தின் உள்பகுதியில்தான் இந்த நிலை என்றால், மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சத்திரம் பேருந்து நிலையத்துக்கு வருவதற்காக உள்ளே நுழைய போட்டி போடும் தனியார் பேருந்துகளால் மற்றொரு பக்கமும் போக்குவரத்து நெரிசல்.
பேருந்துகள் மட்டுமல்லாது, சாலையோரத்தை ஆக்கிரமித்து இருக்கும் ஆட்டோக்கள், தட்டு ரிக்ஷாக்கள், கார்கள், வேன்கள் எல்லாவற்றாலும் போக்குவரத்து நெரிசல் சத்திரம் பேருந்து நிலையத்தில் தொடர்கிறது.
சத்திரம் பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில் பாலக்கரை, மார்க்கெட், உறையூர் வழியாகச் செல்லும் பேருந்துகள் நின்று பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக நீண்ட நிழல் குடைகள் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி என். சிவாவின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட்டன.
ஆனால், இந்த நிழல்குடைகள் சரியாகப் பராமரிக்கப்படுவதில்லை. இந்தப் பேருந்து நிழல் குடைகளில் பயணிகள் நிற்கக்கூட இடம் இல்லாத அளவுக்கு ஆக்கிரமிப்புகள். பாதி இடத்தை நரிக்குறவர்கள் ஆக்கிரமித்துக் கொள்ள, எஞ்சிய இடத்தை பழ வியாபாரம் செய்பவர்களும், மற்றவர்களும் ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். இவை போக எஞ்சிய இடத்தில்தான் மக்கள் நிற்க முடியும்.
இந்தச் சூழ்நிலையில்தான் இந்தப் பகுதி வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களும், சாலையைக் கடப்பவர்களும் கடந்து செல்ல வேண்டும். சத்திரம் பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியின் நிலை இது.
மாநகராட்சியின் பொது நிதியிலிருந்து ரூ. 50 லட்சத்தில் சென்னை மாநகரில் உள்ளது போன்ற பிரம்மாண்டமான பெரிய பேருந்து நிறுத்த நிழல்குடைகள் சத்திரம் பேருந்து நிலையத்தின் மற்றொரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வளவு பிரம்மாண்டமாக நிழல்குடைகள் அமைக்கப்பட்டிருந்தாலும், பயணிகள் அமருவதற்கு இருக்கைகள் எதுவுமில்லை. இந்த இடத்திலும் ஆக்கிரமிப்புகள் தொடர ஆரம்பித்துள்ளன. எந்த வழித்தடத்தில் எந்தப் பேருந்து செல்கிறது என்பதைக் காட்டும் தகவல் பலகைகள் எதுவுமில்லை. இதனால், மக்களாகப் பார்த்து தெரிந்து கொண்டு பேருந்துகளில் ஏறிச் செல்ல வேண்டிய நிலை.
என்ன செய்ய வேண்டும்: புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு காலம் வரும் போது வரட்டும். அதற்குப் பதிலாக சென்னையில் பாரிமுனை, உயர் நீதிமன்றம் போன்ற இடங்களில் உள்ளது போன்று, திருச்சியிலும் சாலையோரப் பேருந்து நிறுத்துமிடங்களை ஏற்படுத்த வேண்டும்.
தற்போது 50 முதல் 60 பேருந்துகள் மட்டுமே நின்று செல்லக்கூடிய பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. 30 முதல் 40 பேருந்துகளுக்கான பயணிகள் நிழல் குடைகளோ, பேருந்து நிறுத்தங்களோ இல்லை. எனவே, தற்போதுள்ள பேருந்து நிறுத்த அளவை நீட்டிக்க வேண்டும்.
தற்போது கல்லூரிச் சாலை என்றழைக்கப்படும் இடத்தில் தொடங்கி இந்திரா காந்தி கல்லூரி, தூய வளனார் கல்லூரி வணிக வளாகச் சாலை, கரூர் புறவழிச் சாலை என கலைஞர் அறிவாலயம் வரை சுமார் 60 முதல் 75 பேருந்து நிறுத்துமிடங்களை தனித்தனியே உருவாக்கி பேருந்துகளை அங்கு நிறுத்த செய்தாலே போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும்.
இவ்வாறு சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு செய்தாலே போக்குவரத்து நெரிசல் இல்லாத திருச்சியை உருவாக்க முடியும் என்கிறார் எம்.ஜி.ஆர். நல்பணி மன்றத்தின் நிறுவனச் செயலர் கண்ணன் என்கிற என். ராமகிருஷ்ணன்.
அவர் மேலும் கூறியது:
"இவ்வாறு செய்வதற்கு முன்பாக இந்தச் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை பாகுபாடில்லாமல் அகற்ற வேண்டும். சத்திரம் பேருந்து நிலையப் பகுதியிலேயே பொதுமக்கள் பயன் அடையும் வகையில், 24 மணி நேர அவசர சிகிச்சை மருத்துவ மையத்தையும் தொடங்க வேண்டும்' என்றார் அவர்.
1990-ல் கைவிடப்பட்ட திட்டம்: தற்போதுள்ள சத்திரம் பேருந்து நிலையத்தை 7.47 லட்சம் சதுர அடியில் நவீனப்படுத்தி சிந்தாமணி நவீன பேருந்து நிலையம் என்ற பெயரில் உருவாக்க, திருச்சி நகராட்சியாக இருந்த போது 1990-ல் திட்டம் தீட்டப்பட்டது. ஆனால், என்ன காரணத்தாலோ அதன் பின்னர் எந்த நடவடிக்கையும் இல்லாமல் முடங்கிப் போய்விட்டது இந்தத் திட்டம்.
மக்கள் தொகை பெருக்கத்தால் போக்குவரத்துப் பயன்பாடும் அதிகரிக்கும் இந்தச் சூழ்நிலையில், மாற்றுத் திட்டத்தை மேற்கொள்வது ஒரு பக்கம் இருந்தாலும், தற்போதுள்ள இடத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்தி, நெரிசல் இல்லாத போக்குவரத்தை உருவாக்க வகை செய்யும் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டியது ஆட்சியாளர்களின் கையில் உள்ளது. மற்றவற்றில் எல்லாம் முன் உதாரணமாகத் திகழும் திருச்சி மாநகராட்சி சத்திரம் பேருந்து நிலையத்தையும் சற்று கவனத்தில் கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால், எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிக்க நிலையமாகத்தான் இந்தப் பேருந்து நிலையம் காணப்படும் என்பதில் ஐயமில்லை என்கின்றனர் மாநகர மக்கள்.